Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

காலம்

இப்போதெல்லாம்
பெருமூச்சு விடாமலே
கடக்க முடிகிறது
அந்த ரயில் நிலையத்தையும்
மண மண்டபத்தையும்

அவள் குழந்தைக்கு
அநேகமாக ஒரு வயதிருக்கும். 

கலிங்கத்துப் பரணி

இரண்டு வருடங்களுக்கு முன்பு கலிங்கத்துப் பரணி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ரசித்த சில பாடல் வரிகளை புதுக்கவிதையாக்க முயன்றேன். இதோ...

கனவினில் ஊடல்
கொண்டதென்று
காலையில் மனத்தொடுச்
சண்டையிடுவாய்

உனைப்பற்றியிருக்கும்
தாவணியை நான் பற்ற
நின்ற இடத்தில நின்று
விட்டு விடு என்பாய்
குழம்பிப்போவோம்
நானும் தாவணியும்

கனவில் என்
கை பட்ட இடங்களில்
காலையில் தேடுவாய்
நகங்களின் காலடிகளை

உண்மை எனும்படி
ஒரு பொய்த்தூக்கம் போடுவாய்
எழுப்பும் நோக்கத்தில்
இடையில் கை வைத்தாலோ
இன்னும் கொஞ்சம் இயல்பாய் நடிப்பாய்

உடையில் ஒரு கை ஓய்வெடுக்க
குழல் மறு கையில் ஓய்வெடுக்க
உறங்கும்போதே
தோன்றுவாய் அழகாக
எனில்
எழுந்து நீ நடந்தால் ...

பஞ்சத்தில் உழன்றவன் பெற்ற
பணக்குவியல் போல
யாருமில்லா இடத்தில்
பார்த்து மகிழ்வாய்
இரவின் குறிகளை

பொல்லாத கோபம் தீர்ந்து
புன்னகை சிந்தும்போது
கண்களில் இயற்றுவாய்
துளி கண்ணீர்க் கவிதையை.

வருத்தம்

எதிர் வீட்டில் துக்கம்
சோகத்தில் நான்

இன்னும் திரும்பவில்லை
யாரோ எடுத்துச்சென்ற
என் வீட்டு வாகனம்.

வருகைப்பதிவேடு (!)

வருவோரின் எண்ணிக்கை
வசதியாய்க் குறிக்கப்படுகிறது
கோயில் தூண்களில்
குங்குமதீற்றலாக. (01.04.2004)
சகஜமாய்ப்பயணித்துக்கொண்டிருக்கும்
நெடுஞ்சாலையில்
திடுமென குறுக்கிடும்
ஆட்டுக்குட்டியாய்
எதையோ தேடுகையில்
புத்தகத்திலிருந்து விழுகிறது
உன் புகைப்படம். (2003-ல்)

வலி(மை)

எறும்பை நசுக்க
முற்படும்போதெல்லாம்
ஞாபகத்தில் தோன்றுகிறது
மதம் பிடித்த யானை. (எழுதியது 22. 02.2003 இல்)

என் தோழிக்கு....

உன்னைக் காணாமலே
இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்
வைரமாய் இருந்தும்
பட்டைத் தீட்டப்படாமல்.

முதல் எழுத்து (initial)

சிப்பியை மறந்துவிட்டு
மழைத்துளிக்கு மரியாதை.


 இதுவே என் முதல் கவிதை (அல்லது சிந்தனை). சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியது.